பொய் தகவல் பரப்புவதை ஏற்க முடியாது: 5-ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்பை விமர்சிப்பதா? நீதிபதி வேதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, January 30, 2020

பொய் தகவல் பரப்புவதை ஏற்க முடியாது: 5-ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்பை விமர்சிப்பதா? நீதிபதி வேதனை

5 ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்பை விமர்சிப்பதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.


கோவை மாநகராட்சி சார்பில் சூரிய மின்சக்தி திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.



அதாவது, சூரிய மின்சக்தி திட்டத்தினால் பொதுமக்களுக்கு தோல்நோய் ஏற்படும் எனவும், சிறுநீரகத்தில் பிரச்சினை வரும் என்றெல்லாம் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 10-ந்தேதி ஜாகீர் உசேனை கைது செய்தனர். சிறையில் உள்ள அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘உள்நோக்கத்துடன் இந்த செய்தியை மனுதாரர் பரப்பவில்லை’ என வாதிட்டார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், ‘சூரிய மின்சக்தி திட்டம் குறித்தும், அமைச்சர் குறித்தும் மனுதாரர் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார்.


குறிப்பாக சூரிய மின்சக்தியால் கொடிய நோய்கள் பரவும் என பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசுவதா? சூரிய மின்சக்தியால் தோல் வியாதி வரும் என்று மனுதாரர் வாட்ஸ்-அப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.



அவர் என்ன படித்துள்ளார்? அவரது கல்வித்தகுதி என்ன? சூரிய மின்சக்தி துறையில் அவர் நிபுணரா? அறிவியல் ரீதியாக இதுகுறித்து ஏதாவது ஆராய்ச்சிகளை மேற்கொண்டாரா?’ என்று மனுதாரர் தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘பொறுப்பற்ற, ஆதாரமற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பலர் சர்வ சாதாரணமாக பரப்புகின்றனர்.


 தமிழகத்தில் மற்ற மாசுக்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்புவதுதான் மிகப்பெரிய மாசுபாடாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


இதுபோன்ற வதந்திகளால் அரசின் நல்ல திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய முடியாமல் போய்விடும். பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என்று கண்டித்தார்.

எனவே சூரிய மின்சக்தி குறித்து எந்த சமூக வலைத்தளத்தில் மனுதாரர் தகவல்களை பரப்பினாரோ, அதே தளத்தில், தான் அடிப்படை ஆதாரமற்ற தகவலை பதிவிட்டு விட்டதாகவும், தான் தவறை உணர்ந்து விட்டதாகவும் பதிவிட வேண்டும் எனக்கூறிய நீதிபதி, அவ்வாறு மன்னிப்பு கோரினால் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் வழக்கின் விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.



முன்னதாக நீதிபதி தனது உரையில், ‘நாங்கள் (நீதிபதிகள்) பல்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்குகிறோம்.


ஆனால் பொதுமக்களில் சிலர் தாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதிகளை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கின்றனர். ஐந்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் ஐகோர்ட்டின் தீர்ப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர்’ என்று வேதனை தெரிவித்தார்.

No comments:

Post a Comment