உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 298 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் நோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாளை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியேவர வேண்டாம் எனவும், அந்த நாள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவு போட்டால் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்து உள்ளன. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு போடுவதன் மூலம் எதிர்காலங்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் தற்காத்து கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஏனெனில் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனாவின் உகான் மாகாணத்தில் இதேபோன்று இரண்டு மாதங்கள் லாக்டவுன் முறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது வீடுகளில் தங்கியிருந்த மக்களில் யாருக்கெல்லாம் கொரோனா தாக்கப்பட்டது என்பது விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அப்போது நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்காணிக்க இந்த ஒத்திகை ஒரு சோதனை களமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் பட்சத்தில் நாடு எதிர் கொள்ளும் புதிய சவால்களை சமாளிக்க இது போன்ற ஊரடங்குகளை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
சுய ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், திறக்கப்படாது.
* தமிழகத்திலும் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
* இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*இந்த நிலையில்,பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
*இதை போல் தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மெளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் நாளை ஓடாது, அவை அனைத்தும் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
*சுய ஊரடங்கு கடைப் பிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் நாளை ஆட்டோக்கள் இயங்காது என அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
* காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது.
* மெட்ரோ ரயில் சேவைகளும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன.எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவையும் நாளை இருக்காது.
* டெல்லி, பெங்களூரு, சென்னையை தொடர்ந்து மும்பையில் நாளை மெட்ரோ ரயில் சேவை ரத்து என அறிவிப்பு
* மக்கள் ஊரடங்கு உள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி நாளை ஆவின் பால் விநியோகம், அம்மா உணவகங்கள், பெட்ரோல் பங்குக்கள் செயல்படும் என அறிவிப்பு ..கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று 3-மணிக்கு மேல் கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி இல்லை.கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை
* மக்களிடம் விழிப்புணர்வு பணிகளை முடுக்கி விட்டு, தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தவே ஞாயிற்றுக்கிழமை, சுய ஊரடங்கை கடை பிடிக்க நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது
* இது குறித்து பிரதமர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது..நாளை சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். நாளை தேவையற்ற பயணங்கள் உதவாது என கூறி உள்ளார்.
No comments:
Post a Comment