முதியோர் உதவித்தொகை நேரடியாக வழங்கப்படும்:வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 3, 2020

முதியோர் உதவித்தொகை நேரடியாக வழங்கப்படும்:வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம்

தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது,
தமிழகம் முழுவதும் முதியோர் உடல் ஊனமுற்றோர் விதவைகள் ஆதரவற்றோர் என சுமார் 32 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதம் தலா ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக இத்தொகை அஞ்சலகங்கள், வங்கிகள், வங்கி உதவியாளர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை செயல்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த மாதத்திற்கான உதவித்தொகையை பெற நேரடியாக வங்கிகளுக்கு வந்தாலோ அல்லது வங்கிப் பணியாளர்கள் தனியாக ஓரிடத்தில் வைத்து விநியோகம் செய்தாலோ கூட்டம் அதிகரித்து சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே இத்தொகையை பயனாளிகளுக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று வழங்க வருவாய்த்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வங்கி உதவியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் இத்தொகையை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது .


 மேலும் இப்பணிகளை ஒருங்கிணைந்து செயலாற்றி மேற்பார்வையிடும் வகையில் அந்தந்த பகுதிக்குட்பட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ 4,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இத்தொகை மாதாமாதம் கருவூலங்களில் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்தந்த வங்கிகள் அஞ்சலகங்களுக்கு உரிய கமிஷனுடன் அனுப்பி வைக்கப்படும். இதேபோல் இந்த மாதத்திற்கான நிதியில் சுமார் ரூ. 316 கோடி வரை ஏற்கனவே கருவூலங்களில் வரவு வைக்கப்பட்டுவிட்டது.

இதனையடுத்து முதல் கட்டமாக நீலகிரி, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையே முதியோர் உதவித்தொகை நேரடியாக வழங்கும் பணி தொடங்கிவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் இதேபோன்ற பணிகளை உடனடியாக தொடங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே பயனாளிகள் அனைவருக்கும் நேரடியாக உதவித்தொகை விநியோகம் செய்யப்பட்டு விடும்.

எனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் தயவுசெய்து வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அமைச்சர் உதயகுமார்

No comments:

Post a Comment