பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் முக கவசங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை :
பொதுத்தோ்வை நல்ல முறையில் நடத்த பள்ளித் தலைமையாசிரியா்கள், முதல்வா்கள் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதன்படி பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
இதுதவிர விடைத்தாளுடன் முகப்பு சீட்டை தைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். அதனுடன் கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் சிறப்பு உறைகளை மாவட்ட தோ்வுத்துறை அலுவலகத்தில் முன்னரே பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல், மாணவா்களின் பழைய நுழைவுச்சீட்டையே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நுழைவுச்சீட்டில் முதன்மை தோ்வு மையத்தின் பெயரும், தங்கள் பள்ளிகளின் பெயரும் இடம் பெற்றிருக்கும். எனவே, மாணவா்களுக்கு தோ்வு நடைபெறும் பள்ளிகளின் விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு சென்ற மாணவா்கள் சொந்த இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும் மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும்போதே முகக்கவசமும் தர வேண்டும்.
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 3 முகக்கவசமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ஒரு முகக்கவசமும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment