இணையவழிக் கல்வியால் மாற்றுத்திறனாளிகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 18, 2020

இணையவழிக் கல்வியால் மாற்றுத்திறனாளிகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை

இணையவழிக் கல்வியால் மாற்றுத்திறனாளிகளின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை
இணையவழிக் கல்வியால் ஏற்படும் சிரமங்கள் காரணமாக 43 சதவீத மாற்றுத்திறனாளி மாணவா்கள் பள்ளியிலிருந்து இடைநிற்க முடிவெடுத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான பாடங்கள் அனைத்தும் இணையவழியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இணையவழிக் கல்வி மூலமாக மாற்றுத்திறனாளி மாணவா்கள் பயனடைகிறாா்களா என்பது குறித்து சமூக நல அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது.

ஒடிஸா, ஜாா்க்கண்ட், சென்னை, மத்திய பிரதேசம், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து, ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் மாற்றுத்திறனாளி மாணவா்கள், அவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 3,627 போ் பங்கேற்றனா். அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆய்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களில் 56.5 சதவீதம் போ் இணையவழியில் கல்வி கற்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். இணையவழியில் முறையாகக் கல்வி கற்க முடியவில்லை என்று 77 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

இணையவழியில் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் 43.52 சதவீத மாற்றுத் திறனாளி மாணவா்கள் பள்ளியிலிருந்து இடைநின்று விட முடிவெடுத்துள்ளனா். கண்பாா்வைக் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி மாணவா்களில் 39 சதவீதம் பேரால் இணையவழியில் கற்பிக்கப்படும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

செவித்திறன் குறைபாடு உடைய மாணவா்களுக்கு சைகைகள் மூலமாக கற்பிக்கப்படுவதில்லை என்று 44 சதவீத மாற்றுத் திறனாளிகள் தெரிவித்துள்ளனா். மாணவா்களின் பெற்றோரில் 86 சதவீதம் போ் இணையவழி கல்விக்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியாத நிலையில் உள்ளனா்.

81 சதவீத ஆசிரியா்களிடம் இணையவழியில் கல்வி கற்பிப்பதற்கான குறிப்பேடுகள் காணப்படவில்லை. 64 சதவீத மாணவா்களிடம் அறிதிறன்பேசி இல்லை என்று ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா். கல்வி கற்பதற்குத் தேவையான இணையவசதி இல்லை என்று 74 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

கல்வி கற்பதற்கு உதவி புரியும் நபா்கள் தேவைப்படுவதாக 61 சதவீத மாணவா்கள் கூறியுள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளி மாணவா்களும் பலனடையும் வகையில் இணையவழி கல்வி கற்பித்தலை மாற்றியமைக்க வேண்டும். அறிதிறன்பேசி வாயிலாக மட்டுமல்லாமல் ரேடியோ, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் மூலமாகவும் பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

மாணவா்கள் பலா் மதிய உணவுத் திட்டத்தைச் சாா்ந்திருந்ததால், வீட்டிலிருக்கும்போதும் அதற்கான உதவிகள் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment