அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் 2 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளிலேயே இலவச நோட்டுகளும் வழங்கப்படும். அதேபோல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்ககம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியமே இல்லை. கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரும் கருத்து கேட்டு, முதல்வர் இதுகுறித்து முடிவெடுப்பார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரோனா காரணமாக புதிய கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மாற்று ஏற்பாடாக இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்கு தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment