ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 13, 2020

ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

 ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் மடிக்கணினி, உதவித்தொகை, இலவச பயண அட்டை போன்ற அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதால், மாணவர்கள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்குக் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் http://tngptc.in, http://tngptc.com ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


மாணவர்கள் மேற்கண்ட இணையதளங்கள் வழியாகவும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பித்து வருகின்றனர்.


இதுகுறித்து கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறியதாவது:


''அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2,157 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு ரூ.6,471 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இத்துடன் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுக் கட்டணமாக ரூ.600-க்குள் செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. அவர்களுக்கு 25 இடங்கள் உள்ளன.


இங்கு சேரும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளாக ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, இலவசப் பேருந்து பயண அட்டை, பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை மூலமாக மாணவர்கள் தங்களுடைய படிப்புக்கான செலவைச் சமாளித்துக் கொள்ள முடியும்.


தனியார் நிறுவனங்களில் டிப்ளமோ படித்தவர்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில், நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டு வருகிறது


இதேபோல் டிப்ளமோ முடிப்பவர்கள் தொடர்புடைய இன்ஜினீயரிங் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து, அடுத்த 3 ஆண்டுகளில் இன்ஜினீயரிங் பட்டமும் பெற முடியும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


வரும் ஆக. 20-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஒரு மையத்தில் இருந்து தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்''.


இவ்வாறு கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி.ராஜேந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment