அறிவியல் விழிப்புணர்வு தேர்வு; செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்
அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வுக்கு செப்.,30க்குள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார் நிறுவனம், விபா நிறுவனம் இணைந்து, தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தி வருகிறது.
இந்தாண்டில் கொரோனா பேரிடரால், பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நவ., 29, 30 ஆகிய இரு நாட்கள் இணையதளம் வழியில் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்
. இதை, 90 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை உள்ள அனைத்து மாணவ, மாணவியர் தேர்வு எழுதலாம். அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து, 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு என்ற புத்தகத்தில் இருந்து, 20 சதவீத கேள்விகளும், வியான்கடேஸ் பாபுஜி கெட்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் நேரத்தை அளவிடுவதில் அவரின் அறிவியல் சாதனைகள் என்ற புத்தகத்தில் இருந்து, 20 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில், 10 சதவீத கேள்விகளும் என மொத்தம், 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
ஆங்கிலம் தவிர தமிழ், ஹிந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும், மாணவர்கள் தேர்வு எழுத இயலும். தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே நடக்கும். தேர்வு கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். பள்ளி மூலமாக விண்ணப்பிக்க இயலும். செப்.,30 க்குள் www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9344809571 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment