மாணவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று பாடம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சிப் பயணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 26, 2020

மாணவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று பாடம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சிப் பயணம்

 மாணவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று பாடம்:  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சிப் பயணம்



மதுரையில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வசிப்பிடத்திற்கே தினமும் நேரடியாகச் சென்று வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தலைத் தடையில்லாமல் தங்கள் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. 

ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை அப்படி இல்லை. ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு, அனைத்துப் பெற்றோரிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் வசதி கிடையாது. தொலைக்காட்சிகள் மூலம் நடக்கும் வகுப்புகளைப் பார்ப்பதற்குப் பல வீடுகளில் அந்த வசதியும் இல்லை.


மேலும், மாணவர்களைத் தொலைக்காட்சிகள் முன் உட்கார வைத்துப் பாடம் கவனிக்க வைப்பதற்கு, அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஏழைப் பெற்றோர்களுக்கு நேரமும் இல்லை. அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வி இந்தக் கல்வியாண்டில் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சிரமங்களைப் போக்க மதுரை கீழ சந்தைப்பேட்டை டாக்டர் டி.திருஞானம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பா.கீதா, பாக்யலெட்சுமி, வெங்கடலெட்சுமி, சரண்யா, சித்ராதேவி , உஷாதேவி ஆகியோர் தங்கள் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் மாணவர்களின் வசிப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று அவர்களை ஒருங்கிணைத்து மரத்தடியில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கின்றனர்.


மாணவர்களின் நேரடிக் கற்பித்தல் வகுப்புக்கென இவர்களின் நெகிழ்ச்சியான கல்விப் பயணம் தொடர்கிறது. இன்று மதுரை கருப்புப்பிள்ளை ஏந்தல் பகுதியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 40 மாணவர்களுக்கு ஆசிரியர் குழு பாடங்களை நடத்தியது.


இதுகுறித்துத் தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ''பெற்றோர்களின் வேண்டுகோளின்படி முகக்கவசம் அணிந்து, தகுந்த சமூக இடைவெளியுடன் மாணவர்களை அவர்களின் வசிப்பிடப் பகுதியில் ஒருங்கிணைத்தோம்.

 பாடங்களின் பொதுத் தன்மை குறித்தும், ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள தொடர்பு அடிப்படையில் தாவரங்கள் குறித்தும், உணவு குறித்தும் பாடம் நடத்தினோம்


ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் வீதம் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கும் பள்ளிக்குமான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன், உற்சாகமாக இதில் பங்கு கொண்டனர்'' என்றார்.

No comments:

Post a Comment