3 மாநிலங்களைத் தொடர்ந்து மேலும் 2 மாநிலங்களில் செப்டம்பர் 21 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு
ஆந்திரா, அசாம், மேகாலயா மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் நாகாலாந்தில் செப்.21 முதல் பகுதியளவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன
கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துப் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே பொது முடக்கத் தளர்வுகளை அண்மையில் வெளியிட்ட மத்திய அரசு, செப்.21 முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் செப்.21-ம் தேதி முதல் படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ், ''9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆசிரியர்கள், பாடங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க பள்ளிக்கு வரவேண்டும். அதேநேரத்தில் வழக்கமான வகுப்புகளோ, வகுப்பறை நிகழ்வுகளோ நடைபெறாது.
பள்ளிகளைத் திறக்க மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். தனியார் கல்வி நிறுவனங்கள் ஒருமுறை மட்டுமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவதாகப் புகார் அளிக்கப்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாகாலாந்தில் செப்.21 முதல் பகுதியளவு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசின் தலைமைச் செயலர் டெம்ஜென் டோய் கூறும்போது, ''தன்னார்வ அடிப்படையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். அதேநேரம் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களில் 50 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இதர கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, அடுத்த மாதம் வரை டெல்லி, கோவாவில் பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், ஆந்திரா, அசாம் மற்றும் மேகாலயாவில் செப்.21-ல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment