விதிமுறைகள் மீறப்படுகிறதா? ஆன்லைன் வகுப்பை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகிறார்களா? என்பது தொடர்பாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வக்கீல், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பாகும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்
No comments:
Post a Comment