ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளுடைய விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் மத்திய, மாநில அரசுகள் சில பதில்மனு தாக்கல் செய்தனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறை, வழிகாட்டி விதிமுறைகளை உருவாக்கி அதை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதாவது ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டி விதிமுறைகளை பள்ளிகள் ஒழுங்காக பின்பற்றுகிறதா? என்பது குறித்தும், அதேபோல மலைவாழ் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு இவை அனைத்தும் சென்று சேர்கிறதா என்றும் கேள்வி முன்வைத்தனர்.
தொடர்ந்து அதனை எவ்வாறு கண்காணிக்கப்போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மெட்ரிக் குலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் இது தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மலைவாழ் பகுதி மக்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகளை பெற்று கொள்ளலாம். அதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு என்றும், ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் ஆபாச இணையத்தளத்திற்குள் நுழைய முடியாதபடி பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment