மகாத்மா காந்தி பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கம்: சென்னை ஐஐடி ஏற்பாடு
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளில் தேசம் எட்டிய படிநிலைகள் குறித்த இணைய வழி சிறப்புக் கருத்தரங்கத்தை சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கானது, கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல், தன்னம்பிக்கை இந்தியா என்னும் தலைப்பில், ஐஐடியில் தொடங்கி நடைபெற்று வரும் தொடா் விரிவுரை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது.
இதில், அக்.1 முதல் 4-ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறிப்பாக தற்காலத்தில் நமது தேசம் சந்தித்து வரும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான பிரச்னைகள் குறித்து தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் எடுத்துக் கூற உள்ளனா். இந்நிகழ்ச்சியை, அக்.1-ஆம் தேதி, ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி தொடங்கி வைக்கிறாா்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோா், இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment