பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று
புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி ஜீவானந்தம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவிக்கும், வாதானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது
. மேலும், சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று கோரிமேடு இந்திராகாந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த ஆசிரியர்கள் சென்ற வகுப்பறைகள் மூடப்பட்டு, மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பதன் மூலம் கரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும். எனவே, பள்ளிகளை திறக்கக் கூடாது என எதிர்க்கட்சியினர் உட்பட பல தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment