நீட் தேர்வு குளறுபடி: 590 மதிப்பெண்களுக்கு பதிலாக 6 மதிப்பெண் காட்டியதால் மாணவி விபரீத முடிவு
மத்தியபிரதேசத்தில் நீட் தேர்வு முடிவில் 590 மதிப்பெண்களுக்கு பதிலாக 6 மதிப்பெண்கள் காட்டியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான மாணவி விதி சூர்யவன்ஷி. இவர் மருத்துவராக ஆக வேண்டும் எனும் தனது கனவால் நடந்து முடிந்த நீட் தேர்வில் பங்குபெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தனது நீட் முடிவுகளைச் சரிபார்த்தபோது, தேர்வு முடிவில் தனக்கு 6 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்ட மதிப்பெண்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்
தனது மதிப்பெண்களால் ஏமாற்றமடைந்த விதி, செவ்வாய்க்கிழமை காலை தனது அறைக்குள் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் நன்றாகப் படிக்கும் தனது மகள் குறைவான மதிப்பெண்களைப் பெற்றது குறித்து சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் விடைத்தாளை பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் மாணவி விதியின் விடைத்தாளில் 590 மதிப்பெண்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. தேர்வு முடிவில் வெளியான குளறுபடியால் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மாணவி விதி ஒரு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்பியதால் நீட் தேர்வுகளுக்கு கடினமாக படித்தார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment