மாணவர்களுக்கான இணையதளக் கட்டுரைப் போட்டி
அக்டோபர் 21 காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காவல்துறையைப் பற்றிய இணையதளக் கட்டுரைப் போட்டியை 3 தலைப்புகளில் திருநெல்வேலி காவல்துறை நடத்துகிறது. திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் மட்டும் இதில் கலந்துகொள்ளலாம்.
காவல் பணி சட்டம்- ஒழுங்கைக் காப்பது மட்டுமல்ல அதையும் தாண்டி சமுதாயப் பணி என்பதை ஆங்காங்கே அரிதினும் அரிதாக சில அதிகாரிகள் புரிந்து நடப்பார்கள். மக்களிடம் சட்டம்- ஒழுங்கு பணியைத் தாண்டி சமுதாய அக்கறையை வலியுறுத்தும் வகையில் நெருங்குவதன் மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நெருக்கம் உருவாகிறது.
அதிலும் வளரும் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒழுக்கமுள்ள குடிமகனாக வளர்த்தெடுக்க முடியும். விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் மாணவர் சமுதாயம் பயனுறும். இத்தகைய செயல்களை திருநெல்வேலி மாநகரக் காவல்துறை சார்பில் அதன் ஆணையர் தீபக் எம்.டாமோர், துணை ஆணையர் சரவணன் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இளம் தலைமுறையினரிடம், பெண் குழந்தைகளிடம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நெல்லை மாநகரக் காவல்துறை காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான இணையதளக் கட்டுரைப் போட்டியை நடத்துகிறது. மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் நெல்லை மாநகர மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகரக் காவல்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பு:
''திருநெல்வேலி மாநகரக் காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காவல்துறையைப் பற்றிய இணையதளக் கட்டுரைப் போட்டியை நடத்துகிறது.
பிரிவு - 1: 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை,
( நான் காவல்துறை அதிகாரியானால் )
பிரிவு - 2: 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு,
(காவல்துறை உங்கள் நண்பன் )
பிரிவு - 3: 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு,
( காவல்துறையில் நான் விரும்பும் மாற்றம்)
என்ற தலைப்புகளில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி தெளிவாக ஸ்கேன் செய்தோ அல்லது வேர்ட், பிடிஎஃப் ( Word, Pdf) வடிவில் nellaicopsmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24-10-2020 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரை அனுப்பும் மாணவர்களின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விவரம் மற்றும் தொலைபேசி எண் இணைக்கப்படுதல் அவசியம்.
ஒவ்வொவொரு பிரிவிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. மேலும் தலா 10 நபருக்கு ஆறுதல் பரிசும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்''.
இவ்வாறு நெல்லை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment