நகரமைப்பு கல்வியில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மத்திய அரசு உத்தரவு
நகரமைப்பு திட்டம் தொடர்பான கல்வி முறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க, 14 பேர் அடங்கிய குழுவை அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில், நகர்ப்புற வளர்ச்சி வெகுவாக அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில், நகரமைப்பு வல்லுனர்கள் இன்றி, கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசு துறைகளில் பணியில் இருக்கும் நகரமைப்பு வல்லுனர்களும், தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி செயல்படுவதில்லை என, கூறப்படுகிறது.
இதனால், நகரமைப்பு திட்டம் தொடர்பான கல்வி நிலையில் இருந்தே சீர்திருத்தங்களை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, நிடி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்குமார் தலைமையில், 14 பேர் அடங்கிய சிறப்பு ஆலோசனை குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.
இதில், மத்திய வீட்டுவசதி, நகரப்புற விவகாரங்கள் துறை, உயர் கல்வித் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை, பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஐந்து மாதங்கள், இக்குழு செயல்படும். நகரமைப்பு கல்வி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, இக்குழு பரிந்துரைக்கும். பரிந்துரைகள் அடிப்படையில், நகரமைப்பு கல்வி திட்டம் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment