மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்: முதல்வர்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லுார் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், தேனி எம்.பி., ரவீந்திரநாத் பங்கேற்றனர். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார்.
காலை 10:25மணிக்கு முதல்வர் பழனிசாமி மலர்வளையம் வைத்து முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.அவர் கூறியதாவது:
தேவரை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் 1979 ல் அக்.,30 தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. 13 கிலோ தங்கக் கவசம் செய்யப்பட்டது. பசும்பொன் நினைவிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் செழிக்க காவிரி--குண்டாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர் நலனை பாதுகாக்க மீன்பிடி துறைமுகம், துாண்டில் வலைகள், ஆழ்கடல் படகிற்கு மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவக்கல்லுாரி பயில வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உட்பட யாரும் கோரிக்கை வைக்காமலேயே இதை செய்துள்ளோம். இந்த கல்வியாண்டில் இது அமலுக்கு வரும்.எங்கள் ஆட்சியில் எதைக்கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்
முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.
No comments:
Post a Comment