C.A தேர்வு குறித்து ICAI விளக்கம்
சிஏ தேர்வுகள் தள்ளி வைக்கப்படவில்லை என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது.
எனினும் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதற்கு இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐசிஏஐ, ''சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும்.
தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம். அது தொடர்பான தகவல்களையும் பிறரிடம் பகிர வேண்டாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக மாணவர்கள் icai.org என்ற இணையதளத்தை மட்டுமே பின் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment