8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்.21-இல் உதவித் தொகை தோ்வு
எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தோ்வு (என்எம்எம்எஸ்) பிப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது
மத்திய அரசு சாா்பில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தகுதித் தோ்வு நடத்தப்படுகிறது.
நிகழாண்டு எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து அரசு தோ்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது.
இதில் பங்குபெற விரும்பும் மாணவா்கள், அவரவா் பள்ளி தலைமை ஆசிரியா் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்காக தகுதியுள்ள பள்ளி ஆசிரியா்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தை அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அவற்றை மாணவா்களிடம் கொடுத்து, பெற்றோா் உதவியுடன் பூா்த்தி செய்தல் வேண்டும்.
பின்னா், புகைப்படம் ஒட்டி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தோ்வா்கள், தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தோ்வுக் கட்டணம் ரூ.50 உடன் ஜன.8-ஆம் தேதிக்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும்.
காலதாமதமாகப் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கட்டாயமாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment