சி.எஸ்.ஐ., தேர்தலில் ஆசிரியர்கள் பங்கேற்கத் தடை
சி.எஸ்.ஐ.,தேர்தலில் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆரோக்கியம் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மத நிறுவனங்கள் உட்பட எந்த ஒரு அமைப்பின் தேர்தலில் பங்கேற்பதை தமிழ்நாடு தனியார் பள்ளி (ஒழுங்குமுறை) சட்டம் விதிகள் தடை செய்துள்ளது
. 'சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன்'மற்றும் 'தி சர்ச் ஆப் சவுத் இந்தியா'(சி.எஸ்.ஐ.,) கீழ் தென் இந்தியாவில் 24 மறைமாவட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழ் 94 கல்லுாரிகள், 2045 பள்ளிகள், 47 தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
சி.எஸ்.ஐ.,நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவர்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் விதிகளை மீறி சர்ச் தேர்தலில் போட்டியிட்டு, பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.
தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை பள்ளிகள், நிறுவனங்களில் பணி மட்டுமன்றி, மாணவர்களின் நலன் பாதிக்கிறது.சி.எஸ்.ஐ.,தேர்தலில் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். போட்டியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆரோக்கியம் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு:சி.எஸ்.ஐ.,தேர்தலில் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,22 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
No comments:
Post a Comment