'நீட்' மதிப்பெண் குளறுபடி புகார்: விசாரணை குறித்து 21ல் முடிவு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' விடைத்தாள் மதிப்பெண் முறைகேடு புகார் தொடர்பாக, தனிப்பட்ட ஏஜன்சி விசாரிப்பது குறித்து, வரும், 21ம் தேதி முடிவெடுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த, 'நீட்' தேர்வில், கோவையைச் சேர்ந்த மனோஜ் என்பவர் பங்கேற்றார். அக்டோபர், 5ல் முடிவு வெளியானது. 700க்கு, 594 மதிப்பெண் பெற்றதாக பதிவு இருந்தது.
அக்., 17ல், 248 மதிப்பெண் மட்டுமே பெற்றதாக, இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதாக கூறப்பட்டது.இரு மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
248 மதிப்பெண்
விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இவ்வழக்கு, நீதிபதி பி.புகழேந்தி முன், விசாரணைக்கு வந்தது.தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, வழக்கறிஞர் ஜி.நாகராஜன் ஆகியோர்,
'அதிக மதிப்பெண் எடுத்ததாக காட்டப்பட்டது, இட்டுக்கட்டப்பட்ட ஒன்று.248 மதிப்பெண் மட்டுமே, மனுதாரர் பெற்றுள்ளார்' என்றனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி, ''ஆவணங்கள் எதையும் திருத்தவில்லை; எந்த ஏஜன்சியை நியமித்தும் விசாரணை நடத்த, நீதிமன்றம் உத்தரவிடலாம். முழு விசாரணை நடத்தினாலே உண்மை வெளிவரும்.''
விசாரணையில், மனுதாரர் மோசடி செய்ததாக தெரிய வந்தால், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள, அவர் தயாராக உள்ளார்,''என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி புகழேந்தி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:இந்த வழக்கில், தனிப்பட்ட ஏஜன்சி விசாரணைக்கு உத்தரவிட தேவை உள்ளதா; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய, வரும், 21ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.
இறுதி முடிவு
புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, மனுதாரர் தவறு செய்தது தெரிய வந்தால், அவர் மட்டுமல்ல, அவரது பெற்றோரும் பொறுப்பாவர்; சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டும். படிப்பையும் கைவிட்டு, கட்டணத்தையும் பெற முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கனவே, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக, மனுதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவரை, அந்த கல்லூரியில் சேர்க்க வேண்டும். இவ்வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்து, அது அமையும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment