மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் கட்டாயம்: ஆசிரியா்கள் வலியுறுத்தல்
தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்குவதுடன், இரு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக கழகத்தின் மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெவ்வேறு பாடங்களில் உயா்கல்வி பெற்றுள்ள அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருவதைப்போல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
தொழிற்கல்வி ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற்றால் அந்தப் பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோா்-ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் 67 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்கல்வி மேலும் வளா்ச்சி பெற அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடம் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், செயலா், இயக்குநா் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment