பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்:அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'~ இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.தொடர்ந்து, பல முறை அவர் அந்த பட்டனை அழுத்தி முயற்சித்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து, வேறு ஒரு நபருக்கு பணம் சென்றதாக குறுந்தகவல் வந்தது.அதன் பின்னர் தான், தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு புரிந்தது. இது அவருக்கு சிறு தொகை தான். ஆனால், திருடியவரோ இவர் போல், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் திருடியிருந்தால்...நினைத்துப்பார்த்தால் மலைப்பாயிருக்கும்!ஆகவே,பணப்பரிவர்த்தனையின் போது வரும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் உமா கூறியதாவது:கோவை மாநகரில், வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாக, மாதந்தோறும் சைபர் கிரைம் பிரிவுக்கு, 200க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வருகின்றன. எந்த ஒரு தகவலையும், ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்து அறிந்து கொள்வதே சிறந்தது.ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான செயலிகளில், வரும் விளம்பரங்கள் குறித்து அந்த செயலியை நிறுவியுள்ள நிறுவனங்களுக்கே தெரிவதில்லை.
பல சமயங்களில், திருடப்படும் தொகை குறைவாக இருப்பதால், புகார் அளிக்க முன்வருவதில்லை. திருடப்பட்ட தொகை குறைவாக இருந்தாலும், எத்தனை பேரிடம் இருந்து திருடப்பட்டது என்பது முக்கியம்.ஏதாவது ஒரு நிறுவனம் குறித்த விளம்பரம் வருகிறது என்றால், அந்நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு, அந்த விளம்பரத்தை அவர்கள்தான் வழங்கினரா என்பதை அறிய வேண்டும். விழிப்புடன் இருந்தால் மட்டுமே பணத்தை காக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment