2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூடுதலாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் கூடுதலாக 2 இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த வாரம் சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், தலைமைச் செயலர், தமிழக தேர்தல் அதிகாரி சாஹு, டிஜிபி, சுகாதாரத்துறைச் செயலர், ஐடி, ஆர்பிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தைக் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கவும், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவும் என மொத்தம் 97,000 வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாஹு மாநிலம் முழுவதும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலம் முழுவதும் மாவட்டவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை அமலுக்கு வரும். அதற்கான அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றையும் அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சுணக்கமின்றி நடக்க ஏதுவாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கூடுதலாக 2 இணை தேர்தல் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் துறை இணைச் செயலர் ஆனந்த், சுகாதாரத்துறை கூடுதல் ஆணையர் அஜய் யாதவ் ஆகியோர் கூடுதலாக தமிழக தேர்தல் இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அஜய் யாதவ் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment