வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்வதற்கான கால வரம்பு குறைப்பு
வரி மோசடி வழக்குகளில் வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்வதற்கான கால வரம்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது நிதிநிலை அறிக்கை உரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
வருமான வரி மோசடி வழக்குகளில், கணக்குகளை மறுஆய்வு செய்வது தொடா்பாக வரி செலுத்துவோா் மத்தியில் நிலவி வரும் நிச்சயமற்றத் தன்மையை போக்கும் வகையில், மறுஆய்வு செய்யும் கால வரம்பு மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சிறிய அளவிலான வரி ஏய்ப்பு வழக்குகளில் வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்வதற்கான கால வரும்பு 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
அதே நேரம், ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெற்று பெரிய அளவில் மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு, அவா்களின் 10 ஆண்டு வருமான வரி கணக்குகள் மறுஆய்வு செய்யப்படும்.
மேலும், ரூ. 50 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் பெறும் சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கான சச்சரவுக்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில், தனி சச்சரவு தீா்வுக் குழு ஒன்று அமைக்கப்படும். அதுமட்டுமின்றி, தனித்துவமான வருமான வரி குறைதீா் தீா்ப்பாயம் (ஐடிஏடி) ஒன்றும் விரைவில் அமைக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியா்கள் நாடு திரும்பும்போது சந்தித்து வரும் இரட்டை வரி விதிப்பு முறை சிக்கலை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளை வருமான வரித் துறை வெளியிடும் என்று அவா் கூறினாா்.
No comments:
Post a Comment