தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோரை சேர்க்க தடை
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில், 55 வயதுக்கு மேற்பட்டோரையும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களையும் சேர்க்க வேண்டாம்' என, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு தொடரும் நிலையில், இத்திட்டமும் தொடர்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பணி செய்வோரின் பாதுகாப்பு முக்கியம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, பணி செய்யும் இடத்தில் மேற்கொள்ள வேண்டும் பாதுகாப்பு நடவடிக்கையாக, 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பணி ஒதுக்க வேண்டாம்.
தொற்று அறிகுறிகளான சளி, இருமல், தும்மல், மூச்சு விடுதல் பிரச்னை, காய்ச்சல் இருந்தால், அவர்களுக்கு பணி வழங்க வேண்டாம்
சர்க்கரை நோய், இதய நோய், மூச்சு விடுவதில் சிக்கல் உள்ளவர்களை தவிர்க்கவும். பணி செய்வோரை, சிறிய குழுக்களாக பிரித்து, சமூக இடைவெளியுடன் பணிபுரிய செய்ய வேண்டும்
தனிப்பட்ட நபர்கள் செய்யும் பணியை, ஐந்து முதல், 10 பேரை கொண்டு செய்யவும்
ஆட்களை அதிக அளவு வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தவிர்க்க வேண்டும்
பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பால் சுத்தம் செய்ய வேண்டும். புகையிலை போட அனுமதிக்கக் கூடாது
பணியாளர்கள் உணவு, தின்பண்டங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்ணக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்தனியே பாட்டிலில், குடிநீர் எடுத்து வர வேண்டும்
நோய் அறிகுறி உள்ளவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பி, கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்
பணியாளர்களில், 45 வயதுக்கு மேற்பட்டோரை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment