மாவட்டத்துக்கே ஆக்சிஜன் தந்த கலெக்டருக்கு பாராட்டு
பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்க, மகாராஷ்டிராவில் நந்துர்பார் என்ற பழங்குடியினர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்குத் தேவை யான அனைத்து வசதிகளையும் செய்து அசத்தி வருகிறார் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராஜேந்திர பாருத்.
ஐஏஎஸ் அதிகாரியும் டாக்டரு மான ராஜேந்திர பாருத் அவரது நந்துர்பார் மாவட்டத்துக்குத் தேவையான ஆக்சிஜன், படுக்கைகள், தனிமைப்படுத்தல் வளாகம், தடுப்பூசி விநியோகம் என அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
இவரது திட்டமிடலால் தற்போது மாவட்டத்தில் எப்போதும் 150 காலி படுக்கைகள் உள்ளன. மற்றும் ஒரு நிமிடத்துக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
கடந்த வருடம் கரோனா பரவல் ஆரம்பமான போது நந்துர்பார் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் இல்லை. ஐஏஎஸ் அதிகாரி பாருத் முயற்சியினால் அம்மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டது. அப்போது நாட்டின் கரோனா எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்த காலம். ஆனால் 2-ம் அலை குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ராஜேந்திர பாருத் அடிப்படையில் மருத்துவர் என்பதால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கலாம் என்று கருதி முன்கூட்டியே திட்டமிட்டு ஆக்சிஜன் உற்பத்தியை செயல்படுத்தி இருக்கிறார்.
அவர் எதிர்பார்த்தது போலவே2-ம் அலையில் நந்துர்பார் மாவட்டத்திலும் ஒரு நாளைக்கு 1,200க்கும்மேல் தொற்று ஏற்பட்டது. ஆனாலும் முன்னெச்சரிக்கை திட்டமிடல் களால் அவசர கால நெருக்கடியை சமாளிக்க முடிந்தது.
ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி, நிதி ஏற்பாடு அனைத்தையும் மாவட்ட திட்ட மற்றும் மேம்பாட்டு நிதி, மாநில பேரிடர் நிதி மற்றும் நிறுவனங்கள் சமூகபங்களிப்பு நிதி உள்ளிட்ட அனைத்து சாத்தியமான நிதி ஆதாரங்களையும் பயன்படுத்தி உள்ளார். பள்ளிக்கூடங்கள், சமூதாயக் கூடங்கள் என 19 கரோனா மையங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளார். 7,000 படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி உள்ள 1,300 படுக்கைகள் இந்த மையங்களில் உள்ளன. மருத்துவர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத் துள்ளார்.
மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இவரது கோரிக்கையை ஏற்று தேவையான வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஏற்பாடு செய்துள்ளார்.
இவரது நிர்வாக செயல் திறனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் 2013-ல் இந்தியநிர்வாக சேவைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றார். முக்கியமாக இவர் ஒரு மருத்துவர் என்பது இவரது செயல்பாடுகளுக்குப் பெரியளவில் உதவியாக இருந்திருக்கிறது.
Awesome preparation for second wave of corona but why this same steps taken by other IAS OFFICERS.
ReplyDelete