அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் காப்பீட்டு திட்டம் மருத்துவ செலவுகளை வழங்க மறுத்த அரசு உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் காப்பீட்டு திட்டம் மருத்துவ செலவுகளை வழங்க மறுத்த அரசு உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘‘அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு  அமல்படுத்தி வருகிறது.


 இந்த திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்தும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறி இருந்தனர்.


நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்கு  சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.


 இதையடுத்து வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி, இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியம் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.


 எனவே  மருத்துவச் செலவுத் தொகையினை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது.


மேலும் மனுதாரர்களின் இந்த கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு  மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்த கோரிக்கையை 30 நாட்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும்.


 தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி இருந்தால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பார்கள். ஆனால் ஆட்சியாளர்களும்,  அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.


எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில்  குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment