பள்ளிச் சுவர்களில் காவலர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

பள்ளிச் சுவர்களில் காவலர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள்

சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலை அரசினர் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர்களில் காவலர்கள் இருவர் வரைந்த விழிப்புணர்வூட்டும் ஓவியங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதனின் அறிவுரையின் பேரில், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், காவல்துறையினர் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் "புதுமை செய்வோம்' திட்டத்தின்கீழ் நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் மதுசூதனன், காமராஜ் ஆகியோர் பள்ளிச் சுவர்களை அலங்கரிக்கும் வகையில் முதன்முதலாக குன்றத்தூர் அரசு பள்ளி வளாகத்தில் தேசத் தலைவர்களின் படங்கள், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விளக்கப்படங்கள், மாணவர்களுக்கான உறுதிமொழி வாசகங்கள், பெண் குழந்தைகளுக்கான அவசர எண் உள்ளிட்ட பல்வேறு அறிவுரை வாசகங்களை ஓவியங்களுடன் வரையத் தொடங்கினர்.

 மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, பாராட்டைத் தொடர்ந்து பள்ளிக்கரணை, கிழக்கு தாம்பரம் அரசு பள்ளிச் சுவர்களில் பல்வேறு ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

பள்ளிச் சுவர்களில் ஓவியம் வரைவது மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு தற்காப்புக்கென கராத்தே பயிற்சி,
மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகளையும் காவலர்கள் மதுசூதனன், காமராஜ் மேற்கொண்டுள்ளனர்.

 சென்னை புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த "புதுமை செய்வோம்' திட்டத்தை சென்னை மாநகரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment