ஆட்டோ சவாரிக்கு சிறப்பு “ஆப்” - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

ஆட்டோ சவாரிக்கு சிறப்பு “ஆப்”

நாகர்கோவிலில் ஆட்டோ சவாரிக்கு ஆன்லைன் மூலம் அழைக்கும் வகையில் சிறப்பு ஆப் மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் பிற நகரங்களை போலவே நாகர்கோவிலிலும் ஆட்டோக்கள் கட்டணம் அதிகமாக உள்ளது.


 இதுபோல் மிகவும் குறுகலான பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தம் போக்குவரத்து நெருக்கடிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. ஆட்டோக்கள் கட்டணத்தை முறைப்படுத்த பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் போராடி வருகின்றன.


 சாலை பாதுகாப்பு கூட்டத்தில், கலெக்டர் மூலம் நடவடிக்கை  மேற்கொள்ள கோரிக்கை விடப்படுவதும், அதன் அடிப்படையில்,  வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆட்டோ டிரைவர்களை கலந்து ஆலோசித்து, வடசேரி பஸ் நிலையம், அண்ணாபஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களிலிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆட்டோ பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.


 இதன்படி கட்டண விபர பலகை ஆட்டோ நிறுத்தங்களில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கட்டணத்தை யாரும் வாங்கவில்லை. கூடுதலாகவே வாங்கி வருகின்றனர்.


 கட்டண பலகையும், இருநாட்களில் பிய்த்து எறியப்பட்டு விட்டது. இதனால் ஆட்டோவில் ஏறி இறங்கினாலே ரூ.50ம், அரை கி.மீ தொலைவிற்கு கூட ரூ.60, ரூ.80 என வாங்கி வருகின்றனர்.


 திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் உள்ளது போன்று முன்கூட்டியே கட்டணம் செலுத்தி செல்லும் திட்டத்தையும் நுகர்வோர் சங்கம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை.

இதனால் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தியே மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.


 சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் ஆட்டோ மற்றும் கார் சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றனர்.


 இதன்படி கட்டணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்த முறை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் இதுபோன்ற திட்டங்கள் குமரி உள்பட தென்மாவட்டங்களில் இல்லை.



இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவதுடன், பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதியதிட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார்.

இதன்படி ஆட்டோக்கள் அழைக்க மாநகராட்சி அலுவலகத்தில், கட்டுப்பாட்டறை அமைத்து, பயணிகள் அழைக்கும்போது, அவர்கள் அருகில் உள்ள ஆட்டோக்களை சீனியாரிட்டி அடிப்படையில், அனுப்பி வைக்கவும், கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தும் வகையிலும், திட்டமிடப்பட்டுள்ளது.


 இதற்காக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகளை அழைத்து இருதினங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment