ஐ.ஐ.டி., நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு தேதியை மாற்ற, சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு, பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்ட் தேர்வு என, இரண்டு விதமாக நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கு, ஜனவரியில் முதல் கட்ட பிரதான தேர்வு நடந்தது.
இரண்டாம் கட்ட பிரதான தேர்வு, ஏப்., 5 முதல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிந்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்தும் பள்ளி பொது தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து, ஜே.இ.இ., தேர்வையும் மாற்றி வைக்க, மத்திய சுகாதாரத் துறை தரப்பில், தேசிய தேர்வு முகமைக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், 'தற்போது சி.பி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அந்த தேர்வுகள், ஏப்ரலில் நடத்தப்படும். இந்த நேரத்தில் நுழைவு தேர்வும் நடத்தினால் குழப்பம் ஏற்படும். எனவே, ஜே.இ.இ., தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும்' என, அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment