கொரோனாவிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

கொரோனாவிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

கொரோனா நோய்க்கு நேரடி தடுப்பு மருந்து எதுவும் தற்போது வரையில் கண்டறியப்படாத நிலையில் அந்நோயின் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் முன் வைத்து வருகின்றனர். 

கொரோனா நோயிலிருந்து எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

பொதுவாகவே, குழந்தைகளுக்கு சளி, இருமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போதைய சூழலில் அது வழக்கமான ஒன்றா அல்லது கொரோனா போன்ற பாதிப்பா என கண்டறிவது கடினமான ஒன்றாகும்.


சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனாவிற்கும் வித்தியாசத்தை உடனே அறிவது சற்று கடினம். அதே சமயம் குழந்தை ஒரே நாளில் சோர்வாகி விடுகிறதா என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். 

 குழந்தைகளுக்குச் சளி, இருமல், காய்ச்சலுடன் உடலில் தசை வலி உள்ளிட்டவையும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது நல்லது. 

இதுபோன்ற அறிகுறி இருப்பின் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். கண்கள், வாய், மூக்கு போன்றவற்றை உங்களின் சுத்தம் செய்யப்படாத கைகளுடன் தொடக்கூடாது.

இதனை குழந்தைகள் செய்வதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் கை குலுக்குவதன் மூலம்தான் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுகிறது.

 எனவே எந்த காரணத்திற்காகவும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் கை குலுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை அடிக்கடி சொல்லிக்கொடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானதாகும். 


குழந்தைகளுக்குத் தேவையான டயப்பர்கள், அடிப்படை மருந்துகள், பெரியவர்களுக்குத் தேவையான மருந்துகள், இன்ஹேலர்கள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரது காலணிகளும் வீட்டின் வெளியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலமாக கொரோனா போன்ற வைரஸ் எளிதில் நம்மைத் தாக்கி விடும். 


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வேலை, பள்ளி என வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தவுடன் அணிந்திருக்கும் உடையை மாற்றி விடுவது நல்லது. அந்த உடையின் மூலமாகவும் வைரஸ் நம் வீட்டின் உள்ளே நுழையலாம். 

குழந்தைகள் வந்தவுடன் எவ்வளவு விரைவில் உடைகளை மாற்றிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அவ்வளவு நல்லது. நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கையின் படி கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு, தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிக மக்கள் கூட்டம் இருக்குமிடங்களில் இது வேகமாகவும், எளிதாகவும் பரவும் தன்மை கொண்டது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 


சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளைக் கொடுங்கள். குறிப்பாக, கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகளை அடிக்கடி கொடுங்கள்.

 அதோடு, வீட்டிலிருந்தே விளையாடுதல், உடற்பயிற்சி போன்றவற்றை ஊக்கப்படுத்துங்கள். இதுபோன்ற காரணிகளின் மூலம் நாம் கொரோனா போன்ற நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

கொரோனா முன்னேற்பாடுகள்

* ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சமைக்காத இறைச்சிகள், சமைக்காத முட்டைகள், சமைக்காத காய்கறிகளை சாப்பிட வேண்டாம்.

* வைட்டமின் சி வகை உணவுகளும் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


* நெல்லிக்காய், சிவப்பு மிளகாய், மஞ்சள் மிளகாய், ஆரஞ்சு, கொய்யாப்பழம், பப்பாளி போன்ற வைட்டமின் சி உணவுகளை அதிகளவில் எடுத்து வாருங்கள். இதன் ஆன்டி ஆக்ஸிடன் தன்மை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய்களை விரட்டுகிறது.

* காய்ச்சிய நீரை வடிகட்டி அருந்த வேண்டும்.

* காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் புரதச்சத்து நிறைந்து உள்ளது.
* தெருவோர கடைகளில் உண்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
* கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது.

* குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருவோர், முதியவர்கள் போன்றோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment