பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் செப்.17-ல் வெளியீடு; கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் செப்.17-ல் வெளியாகும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகப் பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டது. அதாவது ஒரே மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை ஏற்படுத்தும் 10 இலக்க எண் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், ''தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்காக 1,60,834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்துக் கட்டணம் செலுத்திய, 1,31,436 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகப் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்புகளுக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,61,877 ஆகும்.
இதைத் தொடர்ந்து பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் உயர்த்தப்படாது'' என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment