அரசுப்பள்ளியின் சாதனைகளை தெரிவித்து மாணவர் சேர்க்கைக்கு களமிறங்கிய ஆசிரியர்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் சாதனைகளை பெற்றோர், மாணவர்களுக்கு தெரிவித்து, சேர்க்கையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்1 வகுப்புக்கான சேர்க்கை துவங்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு சேர்க்கையை அதிகரிக்க, பெற்றோர், மாணவர்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பள்ளியின் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல துறை சாதனைகளை எடுத்துக்கூறி, சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், நோட்டீஸ் வழங்கி சேர்க்கைக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
வீதிகளில் நோட்டீஸ் வழங்கியும், 'வாட்ஸ்ஆப்', 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
தேர்ச்சி விகிதம், விளையாட்டு சாதனைகள், 'ஸ்மார்ட் கிளாஸ்', ஆங்கில வழிக்கல்வி, 'ஹைடெக் லேப்' வசதி, பயிற்சி முறை உள்ளிட்டவற்றை, பெற்றோர், மாணவர்களுக்கு தெரிவித்து சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்.
ஏற்கனவே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாயிலாக, பல புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கிறோம்.நோட்டீஸ், சமூக வலைதளம், பேனர்கள் வைப்பது போன்ற நடவடிக்கைகளால், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
No comments:
Post a Comment