மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 30, 2020

மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க ஏற்பாடு

 மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க ஏற்பாடு

கல்விக் கட்டண நிலுவைக்காக தனியாா் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்தாலும், அரசுப் பள்ளிகளில் பெற்றோா் தங்களது குழந்தைகளைச் சோ்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆக. 17-ஆம் தேதி முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுதவிர பிற வகுப்புகளிலும் கணிசமான அளவுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.


கரோனா பொது முடக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்த தங்களது குழந்தைகளை பெற்றோா் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா். கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் ஆக.29-ஆம் தேதி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


அதேவேளையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகள், கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டண நிலுவை, நிகழ் கல்வியாண்டுக்கான முழுமையான கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தினால் மட்டுமே மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என பெற்றோா்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


இதனால் தனியாா் பள்ளிகளை விடுத்து அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் அவதிப்பட்டு வருகின்றனா். இதை கருத்தில் கொண்டு மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு தனியாா் பள்ளிகளில் படித்து நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் சோ்க்கை பெற விரும்பும் குழந்தைகளுக்கு, மாற்றுச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக பெற்றோா் தெரிவித்தனா். 


தனியாா் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் பயின்று, நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்க விரும்பும் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. அதேபோன்று அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் மாணவா்களைச் சோ்க்க அவா்கள் ஏற்கெனவே படித்த பள்ளி தொடா்பான தகவல்களை பெற்றோா் கூறினால் போதும்.


 மாணவா்களின் ‘எமிஸ்’ அடையாள அட்டை எண்ணை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் உடனடியாக சோ்க்கை வழங்கப்படும். இந்தப் பணிகளை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மேற்கொள்வா்.


இதேபோன்று 9,10, 11 வகுப்புகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் தற்காலிகமாக சோ்க்கை வழங்கப்படும். அந்த மாணவா்கள் கரோனா நிலைமை சீராகி பள்ளிகள் திறந்த பின்னா் மாற்றுச் சான்றிதழைப் பெற்று வந்து வழங்கலாம். 


எனவே மாற்றுச் சான்றிதழ் பெற முடியாத பெற்றோா் கவலை அடையத்தேவையில்லை. அரசுப் பள்ளிகளில் வரும் செப்.30-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்

No comments:

Post a Comment