அரசு பள்ளி ஆசிரியருக்கு விடுப்பு; தெளிவுரை வழங்காததால் தவிப்பு
அரசு பள்ளி ஆசிரியர், பள்ளிகளில் பணி செய்வது குறித்த தெளிவான வழிமுறை வழங்காததால், தலைமை ஆசிரியர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கால், அரசு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதேசமயம், 10ம் வகுப்பு முடித்த மாணவருக்கு, மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டிய பணியால், அனைத்து ஆசிரியர்களையும் பணிக்கு திரும்ப, தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டனர்.
ஆனால் இதுகுறித்து, கல்வித்துறை வழிமுறை எதுவும் வெளியிடவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஜூனில், ஆசிரியர்கள், பள்ளி இருக்கும் ஊருக்கு திரும்ப அரசு உத்தரவிட்டது.
ஆனால், தென் மாவட்ட ஆசிரியர்கள், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களை கூறி, வராமல் உள்ளனர். அவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த தெளிவு, உயர் அதிகாரிக்கும் தெரியவில்லை.
உள்ளூரில் இருக்கும் ஆசிரியரும், உடல்நிலையால் விடுமுறை தேவை எனக்கூறினால், அவருக்கு, மருத்துவ விடுப்பு வழங்குவதா அல்லது வருகை பதிவு இல்லாததால் அனுமதிப்பதா என்பதும் தெளிவு படுத்தப்படவில்லை.
பலரும் வராமல் இருப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்ற நிலை உள்ளது. இதனால், கல்வித்துறை உடனே தெளிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெளிவான விளக்கமுறை தேவை
ReplyDelete