அரியர் பாடங்களில் மாணவர்களுக்குத் தேர்ச்சி அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? அதிகாரம் இல்லை என்று சொல்கிறார் இவர்
செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு (அரியர்) தேர்வெழுதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது விசித்திரமானது.
பல்கலைக்கழகங்கள் கற்பனையாகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதில்லை.
பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளாகும். சிண்டிகேட், செனட், கல்விக்குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல்படிதான் தேர்வுகள் நடத்தி மாணவர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும்.
இந்நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழல் இதுவாகும். பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தைக் கட்டிக்காப்பது துணைவேந்தர்களின் தலையாயக் கடமையாகும். தேர்ச்சி பெற முடியாமல் போன பாடங்களுக்குத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அந்தப் பாடங்களில் அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது முற்றிலும் மாறுபட்டது
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் 10 பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருப்பார்கள். அந்தப் பாடங்களில் அவர்கள் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும்.
இந்த அறிவிப்பால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் முற்றிலும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு பாலகுருசாமி குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment