தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை உறுதி செய்ய அரசுக்கு கோரிக்கை
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலர் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கும், காய்கனிக் கடைகளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஆன்லைன் வகுப்புகளை இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் நடத்தும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களிடம் 70 முதல் 90 சதவீதம் வரை கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வருகிகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஊதியம்கூட பல தனியார் பள்ளிகளில் வழங்கப்படுவதில்லை என்ற செய்தி கவலையளிக்கிறது.
எனவே, இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் கவனம் எடுத்து தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை உரிய சதவீதத்தில் உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment