பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 25, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண்களும், வருகைப் பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.


இந்த நடைமுறையை ரத்து செய்யக் கோரி, முகமது ஹுமாயூன் உள்பட எட்டு மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆக.25) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த தங்களால், அரையாண்டு தேர்வுக்குப் பிறகே அதைப் புரிந்துகொள்ள முடிந்தது எனவும், தேர்வு நடைமுறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.


மேலும், மார்ச் மாதத்துக்கு முன் நடத்திய திருப்புதல் (revision) தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


பத்தாம் வகுப்புத் தேர்வில் அனைவரும் வெற்றி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டதாகவும், தற்போதைய நிலையில் நீதிமன்றம் தலையிட்டால், அது மாணவர்களின் மேல்நிலைப் படிப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மாணவர்கள் நலன் கருதி, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கரோனா காலத்தில் மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment