ITI படித்தவர்களைப் பொறியாளர்களாக அங்கீகரிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஐடிஐ முடித்து வரைபட அனுபவம் பெற்றவர்களைப் பொறியாளராக பதிவு செய்யும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் வரைபட அனுபவம் பெற்றவர்கள் பதிவு பெற்ற பொறியாளராகப் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழக அரசு 31.01.2020-ல் அரசாணை வெளியிட்டுள்ளது.
ஐடிஐ சிவில் படிப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு தொழில்கல்வி பயின்றால் போதும்.
இந்தக் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு அரசின் கட்டிட விதிமுறைகளை புரிந்து வரைபடம் அல்லது கட்டிடம் கட்ட முடியாது. தற்போது ஐடிஐ முடித்தவர்கள் பிஇ அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்களிடம் ஆலோசனை பெற்று வரைபடம் வரைகின்றனர்.
ஐடிஐ-யில் இயந்திரவியல் , மின்னணுவியல் , மின்னியல் படித்தவர்கள் பொறியாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் வரைபட அனுபவம் பெற்றவர்கள் பொறியாளராக பதிவு செய்யலாம் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment