SI எழுத்து தேர்வு முறைகேடு 3 பேர் குழு விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
எஸ்ஐ எழுத்துத்தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் குழு விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த தென்னரசு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடந்தது.
எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கடலூர், வேலூரில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத்தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதே கோரிக்கையை பலர் மனுவாக தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி, ‘‘மனுதாரர்கள் முறைகேடு தொடர்பாக ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை விசாரிக்க தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் 3 பேர் குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment