9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை
9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை என்று மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 மாதங்களாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள யுஜிசி, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முழுமையாக முடிப்பது சாத்தியமில்லை என்று மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக்கழக மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடந்தாலும் 9 மாதங்களுக்குள் ஒட்டுமொத்தப் பாடத்திட்டத்தையும் முடிப்பது கடினம்.
இதில் வார விடுமுறைகள், பண்டிகை விடுப்புகளும் வரும். ஏற்கெனவே முந்தைய செமஸ்டர்களின் துணைத் தேர்வுகளையும், ஆய்வகத் தேர்வுகளையும் நடத்தும் பணியில் இருக்கிறோம்.
அக்டோபர் 31-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிப்பது ஒன்றும் கடினமில்லை. ஆனால் 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுவதுமாக முடிக்க முடியுமா என்று தெரியவில்லை'' என்றார்
கொல்கத்தா பல்கலைக்கழக அதிகாரி கூறும்போது,'' யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றி, பாடத்திட்டத்தை எவ்வாறு முழுமையாக நடத்துவ்து என்பது குறித்து துணைவேந்தர் -உயர்மட்டக் குழு இணைந்து கலந்து ஆலோசிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சப்யாசாச்சி பாசு சவுத்ரி கூறுகையில், ''மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும்.
இதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேர்தல் மையங்களாக மாற்றப்படும். இதனாலும் கற்றல் பாதிக்கப்படும். இது, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களை நடத்தி முடிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றார்.
No comments:
Post a Comment