புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய கல்வி அமைச்சகம்
நாட்டில் புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் இன்று பதிலளித்துள்ளது.
அந்த பதிலில், புதிய கல்விக் கொள்கையின்படி, நாட்டில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மொழியும் மாணவர்களிடம் திணிக்கப்படாது, மூன்றாவது மொழி என்பதை அந்தந்த மாநிலங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பள்ளியில் மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது மத்திய அரசின் நிலைப்பாடு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல, நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்த மாணவர்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்று எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் புள்ளி விவரம் எதுவும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
No comments:
Post a Comment