பிற பல்கலைகளிலும் அரியர் தேர்வு :அண்ணா பல்கலை போல அனுமதி
அண்ணா பல்கலையை பின்பற்றி அனைத்து பல்கலைகளிலும் கடைசி செமஸ்டரில் அரியர் வைத்தவர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அரியர் மாணவர்களுக்கும் சேர்த்து 'ஆல்பாஸ்' வழங்கி தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தர விட்டார்.இதில் இறுதியாண்டை ஏற்கனவே முடித்த மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வில் உள்ள அரியர்களுக்கு 'ஆல்பாஸ்' வழங்க எதிர்ப்பு எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அண்ணா பல்கலையில் மட்டும் 2019 ~ 20ம் கல்வி ஆண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி முந்தைய ஆண்டுகளில் இறுதியாண்டு கடைசி செமஸ்டரில் அரியர் வைத்தவர்களும் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வுகள் இன்று முதல் ஆன்லைன் வழியில் நடக்கின்றன. கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் மொபைல் போன், கணினி, லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப் பட்டு அதில் சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அண்ணா பல்கலையை பின்பற்றி சென்னை பல்கலை தமிழக சட்டப் பல்கலை உட்பட மற்ற பல்கலைகளிலும் முந்தைய ஆண்டில் கடைசி செமஸ்டரில் அரியர் வைத்த மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அவர்களும் ஆன்லைன் வழி தேர்வில் பங்கேற்க வேண்டும் என மொபைல் போனில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு எளிதாக இருக்கவும் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படாமல் இருக்கவும் கடைசி செமஸ்டர் அரியர் தேர்வுகளை நடத்துவதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment