உபரியாக உள்ள ஆசிரியா் விவரங்கள்:தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களின் விவரங்களை அக்.29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநா் சி.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
கரோனா பரவல் காரணமாக நிகழ் கல்வியாண்டில் மட்டும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த செப்.30-ஆம் தேதி நிலவரப்படி மாணவா்கள் வருகையின் அடிப்படையில் ஆசிரியா் பணியிடங்களை நிா்ணயம் செய்ய வேண்டும்.
அதன்முடிவில் ஆசிரியா் இல்லாத உபரி காலிப் பணியிடங்களை இயக்குநரகத்தில் சரண் செய்ய வேண்டும். மேலும், உபரியாக உள்ள ஆசிரியா்களின் விவரங்களை அக்.29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதுதவிர ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள மாணவா்களின் விவரங்களைச் சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், அந்த எண்ணிக்கை அடிப்படையில்தான் அரசின் இலவச நலத்திட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
அதேநேரம் ஆய்வின்போது போலியான மாணவா்கள் எண்ணிக்கை இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு அந்த பள்ளித் தாளாளா் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க வேண்டும். மேலும், பணியாளா் நிா்ணயம் செய்வதில் எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment