ஆன்லைன் வகுப்பு நடத்துவதில் சிக்கல்: மாணவர்களை வீட்டுக்கு அழைத்து பாடம் நடத்தும் ஊராட்சி தலைவர்
கலசபாக்கம் அருகே கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதில் சிக்கல் நீடிப்பதால், மாணவர்களை வீட்டிற்கு அழைத்து பெண் ஊராட்சி தலைவர் பாடம் நடத்தும் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புற பகுதிகளில் சிக்னல் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், ஆன்லைன் வகுப்புகளில் சிக்கல் ஏற்படுகிறது.
ஏற்கனவே கொரோனாவால் பொருளாதாரத்தில் பாதித்த கிராமப்புற மாணவர்கள், ஆன்ட்ராய்டு செல்போன், லேப்டாப் பயன்படுத்த வசதியின்றி தவிக்கின்றனர்.
இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த மேல் வில்வராயநல்லூர் ஊராட்சித் தலைவராக நிலவழகி பொய்யாமொழி உள்ளார். பிஇ பட்டதாரியான இவர் தான் படித்த பள்ளியில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் தனது வீட்டிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் நிலவழகி பொய்யாமொழி கூறுகையில், ‘ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றவுடன் கிராமத்திற்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபதம் ஏற்றேன்.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. நான் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு என்னுடைய வீட்டிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
மாணவர்களும் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர்’ என்றார். பெண் ஊராட்சி தலைவர் படித்த கல்வியை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில், கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் சம்பவம் இப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
No comments:
Post a Comment