தேசிய கல்விக் கொள்கை: கருத்துத் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகப் பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெற்று வருகிறது.
இதற்கிடையே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டோபர் 18-ம் தேதி வரை, யுஜிசி சார்பில் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அவகாசத்தை அக். 31-ம் தேதி வரை நீட்டித்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ''தேசிய கல்விக் கொள்கை குறித்து
https://innovateindia.mygov.in/nep2020-citizen/
என்ற இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கான கால அவகாசம் அக். 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் இதில் பங்கேற்கலாம்.
கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாச நீட்டிப்பு தொடர்பாகவும், கருத்து தெரிவிப்பதன் அவசியத்தையும் அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்த வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment