தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது: துரை பாண்டியன், பொதுச்செயலாளர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்
வெள்ளைக்காரர்களை ஆங்கில ஏகாதிபத்யம் என்று கூறுவோம். ஆனால், இப்போது நடக்கும் ஆட்சியை இந்தி ஏகாதிபத்யம் என்று கூறலாம். மத்திய அரசு வலுவானதாகவும், மாநில அரசு பஞ்சாயத்து யூனியன் போலவும் செயல்பட்டு வருகிறது.
மாநில அரசின் உரிமைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது. கல்வி திட்டங்களை மாநில அரசிடம் கேட்டுதான் சட்டம் இயற்றுவார்கள்.
ஆனால், புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் என்ன பாடம் நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசே தீர்மானிக்கிறது. மாநில சுயாட்சி என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கொள்கை என்பது இந்தியை பல்வேறு மட்டங்களில் கொண்டுவருவதாகவே உள்ளது.
இன்று எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் இந்தி பேசுபவர்களும், இந்தியில் சுற்றறிக்கைகளும் தான் உள்ளது. தமிழகத்தில் இந்தியில் சுற்றறிக்கை விடவேண்டிய அவசியம் இல்லை.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்திக்கு என்று தனியாக ஒரு பிரிவே உள்ளது. இந்த பிரிவில் இந்தியை படிக்க வேண்டும் என்பதாக உள்ளது. இந்தி படிக்கவில்லை என்று மெமோ கொடுத்தார்கள். இதை கிழித்து போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
தமிழகத்தில் இந்தி படிக்க வேண்டிய அவசியமே இல்லை. 2017ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தேர்வு எழுத வந்தார்கள். அப்போது 10க்கும் மேற்பட்டோர் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்ததை கண்டுபிடித்தோம்.
IAS தேர்வை தமிழில் எழுத ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே தேர்வை எழுதலாம் என்று உள்ளது. இதில் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் தோல்வி அடைகிறார்கள்.
எனவே, அந்தந்த தாய் மொழியிலேயே தேர்வு எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை இந்த அரசு கண்டுகொள்வதில்லை.
தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளனர்.
இப்படி வேலையில்லாத இளைஞர்கள் தமிழகத்தில் இருக்கும்போது வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. அரசு பணியாளர் தேர்வானையம் மூலம் தேர்வு எழுதி வரும் வடமாநிலத்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டே தேர்வாகி வருகிறார்கள்.
இதனால், தமிழகத்தில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு பறிபோகிறது.
மின்சார வாரியத்தில் 33 வட இந்தியர்களுக்கு பணி கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பாஜ ஆளும் மாநிலங்களிலேயே 80 சதவீதம் அம்மாநிலத்தவர்களுக்கே வேலை என்று கூறுகிறது. இதுபோன்ற எந்த சட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இவ்வளவு நாள் மத்திய அரசு அலுவலகங்களிலேயே பணியில் இருந்த வடமாநிலத்தவர்கள் தற்போது மாநில அரசில் உள்ள அலுவலகங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment