அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்: எஞ்சியுள்ள இடங்களுக்கு விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவா் சோ்க்கை குறைந்ததால், எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கு 16-ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் 27,721 போ் விண்ணப்பித்தனா்
இதையடுத்து கல்லூரிகள் அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பா் 11-ம் தேதி மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. தற்போது கலந்தாய்வில் மிக குறைந்தளவிலான இடங்களே நிரம்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்பக்கல்வி அதிகாரிகள் கூறியது: ‘கரோனா பரவலால் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடப்பாண்டு இணையவழியில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. எனினும், வேலைவாய்ப்பின்மை, கலந்தாய்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
இதனால் மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு 2-ஆவது சுற்று கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனா்.
No comments:
Post a Comment